திருச்சி அருகே அரசுப்பேருந்து மோதி 10ஆம் வகுப்பு மாணவர் பலி!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவெள்ளறை காளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது இளைய மகன் சாரதி (15). இவர் திருவெள்ளறை அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சாரதி, தனது அண்ணன் சுபாஸ் (29) மற்றம் அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சுபாஸ் வாகனத்தை ஓட்டிச்சென்றார். திருச்சி - துறையூர் சாலையில் திருவெள்ளறை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது.
இதில் வாகனத்தில் இருந்த நிலை தடுமாறி விழுந்த சாரதி மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஸ், சரத் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலின் பேரில் அங்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், சாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக தந்தை தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.