ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவர் பலி!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அபிஷேக் (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த அபிஷேக், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றுக்கு குளிக்க சென்றிருந்தார். கிணற்றில் இறங்கி குளித்தபோது நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிடவே, கிராமத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் தேடினர். அப்போது, அபிஷேக் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் வைகை அணை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.