சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவர் கைது!

 
pocso

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த இஞ்சுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெய் கலைச்செல்வன். இவர் திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

arrest

நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர். அப்போது, அவரது கர்ப்பத்துக்கு கல்லூரி மாணவர் ஜெய் கலைச்செல்வன் தான் காரணம் என தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.