இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டல்... கல்லூரி மாணவர் கைது!
திருச்சி அருகே இன்ஸ்டாகிராம் முலம் பழகிய 16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து 10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் முலம் வேலூர் விருஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்(20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி, பெற்றோர் தனக்கு திருமணம் ஏற்பாடு செய்து வருவதாகவும், இதனால் தான் திருச்சிக்கு வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளதாகவும் மாணவியிடம் செல்போனில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, மறுநாள் தனியார் விடுதிக்கு சென்றபோது, கோகுல் அங்கு வைத்து மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். மேலும், அவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
மகளின் காதல் விவகாரம் அவரது தாய்க்கு தெரியவந்த நிலையில், இதுகுறித்து கோகுலிடம் விசாரித்து உள்ளார். அப்போது, தனக்கு 10 ஆயிரம் பணம் தர வேண்டும் அல்லது தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி உள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலிசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, மாணவர் கோகுலை கைது செய்தனர்.