குமரி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள தெற்கு சூரங்குடி பொட்டல் விலக்கை சேர்ந்தவர் பாபு. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மகள் ஸ்ரீதேவி(17). இவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஸ்ரீதேவி உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

kumari gh

சம்பவத்தன்று மாலை ஸ்ரீதேவி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு செல்வதாக கூறிச்சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீதேவி தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஸ்ரீதேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார், ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.