தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடி அருகே தாய் செலவுக்கு பணம் தர மறுத்ததால் வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள ராஜமன்னியபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் சண்முக மூர்த்தி(19). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் சண்முக மூர்த்தி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு வந்த அவர், தனது தாயிடம் செலவிற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால், தாய் - மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவரது தாய் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சண்முக மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த அவரது தாய், சண்முக மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


