காதலியை பார்க்க சென்றபோது கட்டிவைத்து தாக்குதல்... அவமானத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
tiruppuvanam

திருப்புவனத்தில் காதலியை பார்க்க சென்றபோது கிராமத்தினர் கட்டிவைத்து தாக்கியதால் அவமானத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் சிவசூர்யா(18). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சிவசூர்யா, திருப்புவனம் அருகே உள்ள கழுகேர்கடை பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கழுகேர்கடைக்கு சென்று காதலியை சந்தித்த சிவசூர்யா, பின்னர் திருப்புவனத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். இதனை அறிந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் சூர்யாவை பிடித்து கைகளை கட்டிவைத்து, தங்கள் கிராமத்து பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், இதனை செல்போனில் வீடியோ பிடித்துள்ளனர். 

suicide

இந்த நிலையில், கிராமத்தினர் தாக்கியதால் அவமானம் அடைந்த சிவசூர்யா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசூர்யாவின் உறவினர்கள், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிவசூர்யாவை தாக்கியது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை பார்க்க சென்ற இடத்தில் கிராமத்தினர் தாக்கியதால் அவமானத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்புவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.