தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி அரசுக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மேட்டுக்கொட்டய் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி(19). இவர் தருமபுரி அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வகுப்பு தோழர், தருமபுரி நியூ காலனியை சேர்ந்த தினேஷ்(19). நேற்று விடுமுறை தினத்தையொட்டி, தினேஷ், சக்தியின் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர், அதே கிராமத்தை சேர்ந்த 2 நண்பர்களுடன் அருகில் உள்ள முள்ளனூர் ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு ஏரியில் நீந்தி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தினேஷ் ஏரியின் மையப் பகுதியில் சென்று சிக்கிக் கொண்டார்.
இதனை கண்டு மற்றவர்கள் அவரை மீட்க முயன்றபோதும், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, நண்பர்கள் அவரது சடலத்தை மீட்டு ஏரியின் மையத்தில் இருந்த மரத்தை பற்றிக்கொண்டு, உதவிக்காக காத்திருந்தனர். இதனை கண்டு கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் 1 மணி நேர போராடி ஏரியின் மையப்பகுதியில் இருந்த தினேஷின் சடலத்தையும், சக்தி உள்ளிட்டோரையும் கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, காரிமங்கலம் போலிசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சக்தியின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.