மகன் குடித்துவிட்டு தகராறு செய்ததால் வேதனை... தம்பதி தீக்குளித்து தற்கொலை!
கன்னியாகுமரி அருகே மகன் குடித்து விட்டு தகராறு செய்ததால் விரக்தியில் வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் சீயோன்புரத்தை சேர்ந்தவர்கள் செல்வ ஜெயசிங் (70) - தங்கம் (65) தம்பதியினர். இவர்களுக்கு சதீஷ் (34). ஏசு ஜெபின் (31) என 2 மகன்கள் உள்ளனர். சதீசுக்கு திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், செல்வ ஜெயசிங், தங்கம் மற்றும் இளைய மகன் ஏசு ஜெபின் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். செல்வ ஜெயசிங் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஏசுஜெபின் குடித்துவிட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தம்பதியினர் இருவரும மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ஏசு ஜெபின் மதுபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதியினர் இருவரும், தங்களது அறையை பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.
உடலில் தீப்பற்றியதால் இருவரும் அலறி துடித்ததை கண்டு, ஏசு ஜெபின் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, இருவரும் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார், செல்வ ஜெயசிங், தங்கம் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து, புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏசு ஜெபினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் குடித்துவிட்டு தகராறு செய்ததால் விரக்தியில் தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.