திண்டுக்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் தம்பதி பலி!

 
accident

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாரங்கபாணி - பஞ்சவர்ணம் தம்பதியினர். இவர்களது மகன் ஜோதிபாசு. இவர் திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மகனை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை தம்பதியினர் இருவரும் ஜி.கல்லுப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றனர்.

dgl gh

செம்பட்டி அருகே உள்ள புல்வெட்டிகுளம் என்ற இடத்தில் சென்றபோது சாரங்கபாணி வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.  இதில், வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த இருவர் மீதும், பின்னால் வந்த வாகனங்கள் மோதின. இதில், சாரங்கபாணி, அவரது மனைவி பஞ்ச வர்ணம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.