மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தை தற்கொலை... சிவகாசி அருகே சோகம்!

 
sivakasi

சிவகாசி அருகே குடும்ப தகராறில் மகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (38). லாரி ஓட்டுநர். இவரது மனைவி உமையலட்சுமி. இவர்களுக்கு அபிநயா (9) என்ற மகளும், மனோஜ்குமார்(7) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உமையலட்சுமி உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார்.  இதனை தொடர்ந்து, கணேசன், தனது மகளுடன் பேர்நாயக்கன்பட்டியில் வசித்து வந்த நிலையில், அவரது மகன் விளாத்திகுளத்தில் உள்ள உமையலட்சுமியின் தாயிடம் வளர்ந்து வந்தார்.

sivakasi

இந்த நிலையில் கடந்த ஆண்டு கணேசன், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த உமைய லட்சுமியின் அக்கா ராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணேசன் - ராதிகா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ராதிகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், நேற்று மகள் அபிநயாவுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி டவுன் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சசம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் மகளை கொன்று, லாரி ஓட்டுநர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.