மதுரை அருகே நாட்டு மருந்து குடித்த இளம்பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நாட்டு மருந்து சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா (28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை வேண்டி தம்பதியினர் இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து  வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று கொட்டாம்பட்டி அடுத்துள்ள எம்.புதூர் பகுதியில் உள்ள நாட்டு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் கொடுத்த மலைவேம்பு கசாயத்தை இருவரும் குடித்துள்ளனர். அப்போது, ரோஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது.
kottampatti

இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கருங்காலக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகன் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு மருத்துவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பேறுக்காக நாட்டு மருந்து குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.