தருமபுரி நகராட்சி தலைவர் தேர்தல் - திமுகவை சேர்ந்த லட்சுமி வெற்றி!
தருபுமரி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த லட்சுமி 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 18 வார்டுகளிலும், 1 விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும், அதிமுக 13 இடங்களிலும், சுயேட்ச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதனை அடுத்து, நகராட்சி தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி, தருமபுரி நகராட்சி ஆணையர் சித்ராவிடம், திமுக சார்பில் லட்சுமி, அதிமுக சார்பில் ராஜாத்தி ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக வேட்பாளர் லட்சுமி 20 வாக்குகள் பெற்று, 7 வாக்கு வித்தியாசத்தில் தருமபுரி நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற லட்சுமி மாதுவுக்கு, அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நகரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்படும் என தெரிவித்தார்.