திண்டுக்கல் இளைஞரிடம் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2.5 லட்சம் மீட்பு!
திண்டுக்கல்லில் தனியார் நிறுவன ஊழியரிடம் இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2.5 லட்சம் பணம் மீட்ட சைபர் கிரைம் போலீசார், அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க செல்ல ஹெச் 1 பி விசா பெறுவதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ரூ.2.5 லட்சம் பணத்தை இணையதள வழியில் செலுத்தி உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பந்தபட்ட இணையதளத்தில் இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, மீண்டும் பணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவுப்படி, சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரின் வங்கிக்கணக்கை முடக்கி, ரூ.2.5 லட்சம் பணத்தை மீட்டனர். தொடர்ந்து, நேற்று மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மீட்கப்பட்ட ரூ.2.5 லட்சம் பணத்தை கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.