கிருஷ்ணகிரி அருகே மாற்றுத்திறனாளி பெண் கடத்திக்கொலை - காதலன் வெறிச்செயல்!

 
krishnagiri

கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சம் பணம் கேட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி கொலை செய்த காதலனை பேரிகை போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நெரிகம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது 2-வது மகள் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளி. இவர் ஒசூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பிரியங்காவுக்கு, முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் காதலர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

murder

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரியங்கா, காதலன் ஸ்ரீதரிடம் சமாதானம் பேசுவதற்காக அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரியாங்காவின் தந்தை வெங்கடசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட ஸ்ரீதர், பிரியங்காவை கடத்திவிட்டதாகவும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடசாமி, இது குறித்து பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பிரியங்காவை தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பேரிகை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலன் ஸ்ரீதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.