தண்ணீர் பிடிப்பதில் தகராறு - இளைஞரை அடித்துக்கொன்ற பக்கத்து வீட்டினர்!

 
Murder

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை - சேத்துமடை சாலை, மாசாணியம்மன் கோவில் மண்டபம் எதிரே உள்ள தனியார் காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் (27). இவர் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் வீதியில் தேங்காய் - பழம் விற்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் வசிக்கும் காம்பவுண்ட் குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அதில் அவரது அக்கா பரமேஸ்வரி என்பவரும் வசித்து வருகிறார். 

murder

இந்த நிலையில், நேற்று குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக பரமேஸ்வரிக்கும், அதே காம்பவுண்டில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, பரமேஸ்வரிக்கு ஆதரவாக தினேஷ் பேசியதால், அவருக்கும், அகல்யாவின் தாய் பானுமதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அகல்யாவின் கணவர் தமிழ்செல்வன், அவரது உறவினர் ராகவேந்திரன் உள்ளிட்டோர், தினேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து, தமிழ்செல்வன்,  ராகவேந்திரன் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகல்யா, அவரது தாய் பானுமதி ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய தமிழ்செல்வன், ராகவேந்திரன் உள்ளிட்டோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.