பெருந்துறையில் சிறப்பாக பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு!

 
peru

பெருந்துறையில் நடந்த சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய 5 வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு, அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கேடயம் வழங்கி கௌரவித்தார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. பெருந்துறை வட்டார மருத்துவக் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பெருந்துறை வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு,  கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.

peru

மேலும், சிறப்பாக பணியாற்றிய 5 வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு, எம்எல்ஏ ஜெயக்குமார் சார்பில் கேடயமும் சால்வையும் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த விழாவில், பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சவி ஆர்த்தி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், ராம்ஸ் என்கிற ராமசாமி, பேரூர் செயலாளர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, இளைஞர் பாசறை ரவிக்குமார், பிரபாகரன் உள்ளிட்டோர் உடனருந்தனர்.