கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்குவதாக வெளியாகும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் - தருமபுரி ஆட்சியர்!

 
dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் வேலை வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும், இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தற்போது வாட்ஸ்ஆப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு வகைகள் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி வழங்கி நிரந்தரப்பணி வழங்கப்படும் என போலியாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

Image

கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, உரிய முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி ஆகியவற்றின் மூலம் வெளியாகும் போலியான செய்திகளை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக, ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.