எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் : பெருந்துறையில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 68-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக சார்பில் 68 குடும்பங்களுக்கு அமரும் இருக்கைகளை, எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 68-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கம்பிளியம்பட்டி நாகப்ப கவுண்டன்பாளையம் கிராமத்தில் நேற்று அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 68 குடும்பங்களுக்கு, வீடுதோறும் தலா 4 அமரும் சேர்களை வழங்கினார். இந்த நிகழ்வில் பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, கம்பிளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் பொன்முடி, துணை தலைவர் தங்கவேல், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.