ஆம்பூர் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் கொலை - ஒருவர் கைது

 
girl murder her family by poison

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி என்ற சின்னத்தம்பி (74). கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ஆனந்தன் தனது வீட்டிற்கு பெயிண்ட் அடித்தபோது, குப்புசாமி வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் சேதமடைந்துள்ளது.

ambur

இது தொடர்பாக குப்புசாமிக்கும், ஆனந்தனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று குப்புசாமி வெளியே சென்றுவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆனந்தனின் தம்பியான பலராமன் என்பவர், குப்புசாமியை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த உமராபாத் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி பலராமனை கைது செய்தனர்.  தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.