மதுரை அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் படுகொலை
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்ன கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் வேம்படியான் (63). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களது மகள் பாண்டியம்மாள். வேம்படியான் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரு குடும்பங்களுக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கம், அவரது மகன் முனி உள்ளிட்டோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வேம்படியான் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர். கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த வேம்படியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ராணி, பாண்டியம்மாள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த சேடப்பட்டி போலீசார், அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த வேம்படியானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கம், அவரது மகன் முனி உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.