புதுக்கோட்டையில் வரும் 12-ஆம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக, ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு / தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களுக்காக வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அவ்வமயம் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற் பழகுநராக சேர்ந்து கொள்ளலாம்.
இதில் கலந்துகொள்ள உள்ள மாணவ / மாணவியர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ / மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7000/ - முதல் ரூ.13,000/ -வரை உதவித் தொகை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.