ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கொடிமரம் கும்பாபிஷேக விழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு!
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் கொடி மரத்துக்கு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்திபெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இருந்த பழமையான கொடிமரம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து, பக்தர்கள் நிதியுதவி மூலம் புதிய கொடி மரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன்படி பக்தர்கள் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் 28 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தில், கொடிமரம் அமைக்கப்பட்டு, செப்புக்கவசம் பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசும் பணிகள் நடைபெற்ற வந்தது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து, நேற்று கோவில் கொடி மரத்துக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கருமத்தம்பட்டி பட்டாச்சாரியார் மூலம் நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ரமேஷ், நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தம், கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன், கோயில் அர்ச்சகர் ராமானுஜம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டு சென்றனர்.