"கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல்" - பெரம்பலூர் ஆட்சியர்!
கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு குறித்து வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக வலைதளங்களில் வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து, ரூ.15,000 - ரூ.18,000 வரையிலான ஊதியத்தில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதாகவும், இதற்கான பணி நியமன ஆணைகள் ஜுன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறி சமூக ஊடகங்கள் வழியாக தகவல் பரவி வருகிறது. மேலும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பெயரை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பில்லாத தவறான தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இதுபோன்ற தகவல்களை பகிரும் நபர்கள் குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு 94431 91716 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.