திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

 
murder

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்ராயநல்லூர்‌ கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (60). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் புதுப்பாளையம்‌ கிராமத்தில் உள்ளது. இதன் அருகில், அதே பகுதியை சேர்ந்த முருகன்(32) என்பவரது நிலமும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சின்னராஜின் நிலத்தில் இருந்த சவுக்கு கன்றுகளை முருகன் பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது. 

vilupuram

இதுகுறித்து சின்னராஜ், முருகனிடம் கேட்ட போது,  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த முருகன் தடியால் சின்னராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், சின்னராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சின்னராஜை கொலை செய்த முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் - திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றார்.