வேலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!
வேலூர் அருகே மாட்டு கொட்டகை மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகிலேயே தகரத்தினால் கொட்டகை அமைத்து, மாடுகளை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை கேசவபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, அந்த வழியாக சென்ற மின்கம்பி அறுந்து முருகேசன் வீட்டு மாட்டு கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால் கொட்டகையை தாங்கிக் கொண்டிருந்த கம்பிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனை அறியாத முருகேசன், மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்கு சென்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு, அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.