பெரம்பலூர் அருகே தந்தை, மகன் கிணற்றில் குதித்து தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 
dead body

பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது மகனுடன், தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(34). விவசாயி. இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், 4 வயதில் பிரதீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.  பாஸ்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

dead

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாஸ்கருக்கும், அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாஸ்கர், நேற்று அதிகாலை தனது மகன் பிரதீஸ்வரனை தூக்கிக்கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரது உடலையும் மீட்டனர்.

தொடர்ந்து, கை. களத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் சிறுவனை கிணற்றில் வீசிகொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.