போதையில் தகராறு செய்த மகனை கல்லால் தாக்கி கொன்ற தந்தை... மதுரை அருகே பயங்கரம்!

 
murder

மதுரை மாவட்டம் மேலவளவு அருகே மதுபோதையில் தகராறு  செய்த மகனை தந்தை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலவளவு அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்(65). இவரது மகன் ராஜமாணிக்கம்(35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். மதுப் பழக்கத்துக்கு அடிமையான ராஜமாணிக்கம் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை சந்திரசேகரன் தட்டிக்கேட்டதால் தந்தை - மகன் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

dead body

இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜமாணிக்கம், குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது,  தட்டிக்கேட்ட சந்திரனையும், அவர் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் அருகில் கிடந்த கல்லை எடுத்து, ராஜமாணிக்கத்தின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ராஜமாணிக்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்த மேலவளவு போலீசார், ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.