பழனி அருகே முட்புதரில் சடலமாக கிடந்த பெண் தூய்மை பணியாளர்... கொலையா? என போலீசார் விசாரணை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மாயமான பெண் தூய்மை பணியாளர் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அன்னம்மாள் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அன்னம்மாள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள முட்புதரில் அன்னம்மாள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அன்னம்மாள் கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.