போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 
fire

சேலம் அருகே இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், விரக்தியில் தீக்குளித்த சரக்கு வாகன ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி சந்தோஷ்குமார், மதுஅருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சென்றபோது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தோஷ்குமாரை மறித்து விசாரித்துள்ளனர்.

salem

அப்போது, அவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர். இதில் மனமுடைந்த சந்தோஷ், உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.