முன்னாள் வங்கி மேலாளர் ரயில் முன் தலை வைத்து தற்கொலை... மணப்பாறையில் சோகம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒய்வுபெற்ற வங்கி மேலாளர் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் செல்வம்(67). இவர் சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில், செல்வத்திற்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்தும் நோய் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மணப்பாறை பூமாலைப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சென்னை தேஜஸ் விரைவு ரயில் முன் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.