ஈரோட்டில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்!
ஈரோட்டில் மெல்வி அறக்கட்டளை மற்றும் கேர் 24 மெடிக்கல் சென்ட்ர் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஈரோட்டில் மெல்வி அறக்கட்டளை மற்றும் கேர் 24 மெடிக்கல் சென்ட்ர் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநகர் காலனி அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த இந்த மருத்துவ முகாமை, ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்பிரமணியம் துவங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாக உடல் பரிசோதனை செய்து, பயனடைந்தனர். மேலும், மெல்வி அறக்கட்டளையின் 10-வது ஆண்டு விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில், மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, வருமான வரித்துறை இணை ஆணையர் விமல்ராஜ், வீரப்பன் சத்திரம் பகுதி திமுக செயலாளர் விசி நடராஜன், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஈபி ரவி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், மெல்வி அறக்கட்டளை தலைவர் தீனதயாபரன், செயலாளர் யோவான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.