காதலன் இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... கடலூரில் சோகம்!

 
suicide

கடலூரில் விபத்தில் காதலன் உயிரிழந்ததால் வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகே உள்ள சாலக்கரை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மகள் பிரியா(21). இவர் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், பிரியா, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் பாலாஜியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து, இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதம்  தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தமும் நடந்து முடித்துள்ளது.

cuddalore gh

இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பாலாஜி உயிரிழந்தார். இதனால், பிரியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால், அவர் சோகத்துடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பாலாஜிக்கு கரும காரியம் நடைபெற்றுள்ளது. அப்போது, வாழ்வில் விரக்தியடைந்த பிரியா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தேவநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலன் இறந்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.