பென்னாகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை... சார் ஆட்சியர் விசாரணை!

 
dead

பென்னாகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கோவையில் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லட்சுமி (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பச்சையப்பன், வெளியூரில் பணிபுரிவதால் மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து, மனைவியை சந்தித்து சென்றுள்ளார். இதனால் லட்சுமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

salem

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து லட்சுமியின் உறவினர்கள், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 8 மாதத்தில் லட்சுமி உயிரிழந்ததால், வரதட்சணை கொடுமை காரணமா? என தருமபுரி சார் ஆட்சியர் விசாரித்து வருகிறார்.