கோவை தனியார் குடோனில் கண்ணாடி சரிந்து விபத்து; சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலி!
கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் குடோனில் கண்ணாடிகள் சரிந்து விழுந்ததில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் சுவதேசி கிளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் தனியார் கண்ணாடி குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்வபுரம் பகுதியை சேர்ந்த அலி என்பரது மகன் அபுதாஹிர், ஷாஜகான், மற்றொரு அபுதாஹிர் மற்றும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த மூசா என்பரது மகன் பாபு ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 4 பேரும், லாரியில் வந்த கண்ணாடிகளை குடோனில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக கண்ணாடிகள் சரிந்து விபத்திற்குள்ளானது. இதில் பாபு மற்றும் அபுதாஹிர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஷாஜகான் மற்றும் மற்றொரு அபுதாஹிர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.