மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பலி!

 
drowned

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம் இடைக்கல்லை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜமீன்கான்(21).  இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி ஜமீன்கான் தனது நண்பர்களுடன், மாயனூர் கதவணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றிருந்தார். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஜமீன் கான் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

karur GH

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜமீன் கான் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, மாயனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.