மேட்டுப்பாளையம் அருகே காரில் சடலமாக கிடந்த அரசுப்பள்ளி ஆசிரியர் - போலீசார் விசாரணை!

 
dead

மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற காரில் ஊட்டியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் நேற்று காலை தூரிப்பள்ளம் என்ற இடத்தின் அருகே கார் ஒன்று கேட்பாரற்ற நிலையில் நீண்ட நேரமாக நின்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி  பொதுமக்கள், கார் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, காரில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

mettupalayam

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த ரஞ்சித்(41) என்பதும், இவர் கூடலூர் மண்ணுத்துவயலில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும், அவர் உயிரிழந்து 2 நாட்கள் இருக்கும் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, ஆசிரியர் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.