கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி... சேலம் அருகே சோகம்!

 
dead

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தேங்கல்வாரை பகுதியை சேர்ந்தவர் சின்னையன் (82). இவரது மனைவி ஜெயம்மாள்(74). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், கணவன் - மனைவி இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்புடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்ற சின்னையன், நேற்று காலை படுக்கையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

salem

இதனை கண்டு மனைவி ஜெயம்மாள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதனை தொடர்ந்து, குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கணவர் மீது அதீத பாசம் கொண்டிருந்த ஜெயம்மாள், அவரது மறைவால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும், சின்னையனின் சடலத்தின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த ஜெயம்மாள் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தூக்கிப் பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சின்னையன் - அவரது மனைவி ஜெயம்மாள் ஆகியோரது உடல்களுக்கு ஒன்றாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, அங்குள்ள மயானத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. சின்னையன் - ஜெயம்மாள் தம்பதியினர் இறப்பிலும் இணை பிரியாமல் இருந்தது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.