கோவை அருகே தனியார் பேருந்து மோதி மூதாட்டி பலி!
கோவை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் போஜன் மனைவி பார்வதி(62). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பார்வதி மீது தனியார் பேருந்து மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.