அரக்கோணம் அருகே மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில், அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மனோகரன் மற்றும் அவரது தாயார் அலமேலு ஆகியோர் தங்களுக்கு செந்தமான பழமையான ஓட்டு வீட்டில் படுத்து துங்கி உள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிலில் துங்கிக் கொண்டிருந்த மூதாட்டி அலமேலு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் தீயணைப்பு நிலையம் மற்றும் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.