கோவில்பட்டியில் சரக்குவேனில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
kovilpatti

கோவில்பட்டியில் சரக்கு வேனில் கடத்தமுயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் இனாம் மணியாச்சி - அத்தை  கொண்டான் அணுகு சாலை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது.  இது தொடர்பாக வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

gutka

அதில் அவர்கள் சிவகாசி தெற்கு ஆனைக்கூட்டத்தை சேர்ந்த மாரிச்செல்வம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ரஜினி என்பதும், அவர்கள் விற்பனைக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான 50 கிலோ குட்காவை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த குட்கா புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.