கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய நபர் கைது!

 
kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலை பொருட்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மந்தித்தோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்தில் இருந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

gutka

இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் மந்திதோப்பு காமராஜ் நகரை சேர்ந்த வேல்முருகன் என்பதும், விற்பனைக்காக குட்கா புகையிலை பொருட்களை வாகனத்தில் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, வேல்முருகனை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார், அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1,854 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.