ஒசூரில் காரில் கடத்திய ரூ.1.25 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா பொருட்களை கடத்திய நபரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் வெளி மாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தளி ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலிசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள், மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 142 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் ரூ. 2,500 மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கார் ஒட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஆதவன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்காவை கடத்திச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, ஆதவனை கைது செய்த போலீசார், கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.