பல்லடம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஓட்டுநர் பலி, குழந்தை உள்பட 7 பேர் படுகாயம்!

 
accident

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 வயது குழந்தை உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ். திருமண அலங்காரம் செய்யும் தொழில் இவர்கள் நேற்று மாலை காரில் பல்லடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மூர்த்தி என்பவர் காரை ஓட்டிச் சென்றார். இதேபால், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் மணி(55. இவர் தனது மனைவி மீனாட்சி, மகள் கிருத்திகா மற்றும் 2 வயது பேத்தியுடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் சென்றபோது இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

palladam

இந்த விபத்தில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டேவிட்ராஜ், வெள்ளிமலை, மணி குடும்பத்தினர் என 7 பேர்  பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.