கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் பலி!

 
accident

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள ஆங்கியனுர் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (27). இவர் நேற்று பிற்பகல் அதே பகுதியை சேர்ந்த சரவணவேல் (15) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்துரு (15) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கீழப்பழுவூர் நோக்கி  சென்று கொண்டிருந்தார். செட்டிநாடு சிமென்ட் ஆலை அருகே சென்றபோது, வல்லரசு வாகனத்தின் மீது எதிரே திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த காதர்மொய்தீன் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வல்லரசு மற்றும் காதர் மொய்தீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ariyalur

மேலும், காதர் மொய்தீனின் மகன் நசீர் இஸ்காக், சரவணவேல் மற்றும் சந்துரு ஆகியோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார், பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.