மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு... எஸ்பி பத்ரி நாராயணன் நேரில் விசாரணை!

 
mettupalayam mettupalayam

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் நிர்வாகி கார் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ்(21). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் நகர பொறுப்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு இவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட காரின் கண்ணாடியை மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஹரிஷ் தரப்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

cbe SP

அதன் பேரில், கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் கறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிஎஸ்பி பாலாஜி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகானந்தம் தலைமையிலான போலீசார், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, தாக்குதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளின் வீடு மற்றும் கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மேட்டுப்பாளையத்தில் மீண்டும் இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.