கோவையில் அரசுப் பேருந்து சக்கரம் ஏறியதில் ஐடி ஊழியர் பலி!
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஐடி ஊழியர் மீது அரசுப் பேருந்து சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தர்மராஜ்(21). இவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை தர்மராஜ், தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆர்.ஜி.புதூர் அருகே சென்றபோது தர்மராஜ் வாகனத்தின் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் வாகனத்தில் நிலைதடுமாறி விழுந்த தர்மராஜ் மீது, பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அரசுப்பேருந்து ஒட்டுநர் திருச்செங்கோட்டை சேர்ந்த சரவணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப்பேருந்து மோதியதில் ஐடி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


