காரியாபட்டி அருகே டயர் வெடித்ததில் ஜீப் கவிழ்ந்து விபத்து... போக்குவரத்து ஊழியர், தாய் பலி

 
accident

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே டயர் வெடித்ததால் ஜீப் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் திண்டுக்கல்லை சேர்ந்த தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிறுவன் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது தாயார் மீனா (53), மனைவி உத்திரச்செல்வி (30) மற்றும் உறவினர்களுடன் ஜீப்பில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். சுவாமி தரிசனம் முடிந்து பின்னர் அனைவரும் திண்டுக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீப்பை  ஆனந்த் ஓட்டிச்சென்றார். விருதுநகர் மாவட்டம் காரியபட்டி அருகே ஆவியூர்  4 வழிச் சாலையில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர்கள் இரண்டும் வெடித்துள்ளன. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளான. இதில் ஆனந்த், அவரது தாயார் மீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

kariyapatti

மேலும், ஆனந்தின் மனைவி உத்திரச்செல்வி, உறவினர் அய்யாத்துரை (40), அவரது மனைவி மாலா (35), மகன் யோகித் (8) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவியூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு காரியாப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியான தாய், மகன் ஆகிய இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.