திருவண்ணாமலை அருகே துணிகரம்... விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை!

 
robbery

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துர் அருகேயுள்ள காட்டு நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு விவசாய வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் வந்தபோது வீடு திறந்த நிலையி கிடந்துள்ளது.

tiruvannamalai

இதனால் அதிர்ச்சியடைந்த மணி மற்றும் அவரது குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை திறந்து உள்ளே வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி  கீழ்பென்னாத்துர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வீடு மற்றும் பீரோ சாவியை மணி வீட்டில் மறைவான இடத்தில் வைத்துச்சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள் சாவியை எடுத்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.