திருச்சி அருகே சாலை விபத்தில் செய்தியாளர் பலி!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தமிழ் நாளிதழ் செய்தியாளர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அக்கல்நாயக்கன்பட்டி பகுதியை சோந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் நீலக்கண்ணன் (32). இவர் திருச்சியில் உள்ள பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நீலகண்ணன் நாள்தோறும் விராலிமலையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நீலக்கண்ணன் வாகனம் மீது பின்னால் வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்